Saturday, August 10, 2013

எனது முதல் பதிவின் சந்தோஷம் - தொடர் பதிவு

எனது முதல் பதிவின் சந்தோஷம் என்ற தொடர் பதிவை எழுத என்னை அழைத்த அன்பு நண்பர் கிரேஸ்க்கு நன்றி :).

பதிவுலகம் வந்த இரண்டு ஆண்டுகளான பின்னும் நான் இது வரைக்கும் எழுதின பதிவுகள் 39 தான். மற்ற பதிவுலக நண்பர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது மிக மிக குறைவு என்றாலும் 2-3 பதிவுகளாவது எழுத வேண்டும் என்று தொடங்கிய எனக்கு 39 என்பது சாதனையே :)

சரி.. கதைக்கு வருவோம். எனக்கு எப்படி இந்தப் பதிவு ஆர்வம் வந்தது??.. எல்லாரும் வானத்தை பார்த்துகோங்க, ஒரு சின்ன பிளாஷ்பேக் போக போறோம் :)

பள்ளி படிப்பு முடிச்சு ஒரு 10 வருஷம் இருக்கும். முக்கியமா சொல்லணும்னா தமிழ்ல எழுதி 10 வருஷம் இருக்கும். ஒரு நாள் அப்பா வந்து, "TNEBக்கு கரண்ட் இணைப்பு வாங்க தமிழ்ல ஒரு அனுமதி கடிதம் எழுதணும், சீக்கிரம் எழுதி கொடு" என்று சொல்லிட்டு போயிட்டாரு.  நானும் எழுத ஆரம்பித்தேன். அம்மாடியோவ் !! எவ்வளவு தப்பு, எந்த 'ல' போடணும்னு குழப்பம், எந்த 'ண' போடணும்னு குழப்பம்   எந்த 'ர' போடணும்னு குழப்பம்.  இப்ப நினைச்சாலும் வெட்கமா இருக்கு.  அப்ப தான் தெரிந்தது நான் தமிழ்ல எவ்வளவு மோசமா போயிட்டு இருக்கேன்னு.  இத்தனைக்கும் சொன்னா சிரிப்பிங்க, 12 ஆம் வகுப்பில் எங்கள் பள்ளியில் நான் தமிழில் முதல் மதிப்பெண் பெற்றவன். அப்பா வந்து "என்னடா தமிழ்ல எழுத இவ்வளவு தடுமாறேனு" கேட்டப்ப சுருக்குனு வலிச்சது.  இதை சரி செய்ய ஒரே வழி தமிழில் எழுதி கொண்டே இருப்பது தான் என்று முடிவு செய்தேன். கையில் எந்த காகிதம் கிடைத்தாலும் தமிழில், எனக்கு தெரிந்த திருக்குறள், பாடல் வரிகள், கட்டுரைகள்னு எதாவது எழுதிகிட்டே இருப்பேன். அப்புறம் ஒரு 2 வருடம் கழித்து என் நண்பர் கிரேஸ் அவர்களின் பதிவுகளை தற்செயலாக காண நேர்ந்த பொழுது, "அட இது நல்லா இருக்கே, நாம் தமிழ் கூட எப்பவும் இருக்கலாமே, நானும் இதை பண்ணா என்னனு தோணுச்சு".  முதல் பதிவில் கிரேஸ் அவர்களுக்கு நன்றிகளை உரித்தாக்கி விட்டு ராஜா ராஜ சோழனுடன் தொடங்கியது எனது வலையுலக பயணம் :).  

அவ்வளவு தாங்க பிளாஷ்பேக் .. இப்ப நீங்க தரையை பாக்கலாம் :)

ஏன்டா தமிழ்ல கொலை பண்றேனு  சில திட்டுகள் வந்தாலும், 
பல நண்பர்களின் தொடர் ஊக்கம் என்னையும்  காமராஜர், மகாகவி, இடஒதுக்கீடும், சமத்துவ சமுதாயமும் உள்ளிட்ட கட்டுரைகளும், 
விழித்து எழு தமிழா, குழந்தை தொழிலாளிமாய உலகம் உள்ளிட்ட கவிதைகளையும் எழுத வைத்தது. என் தமிழை சீர் செய்ய வேண்டும்
என்ற வெறியுடன் தொடங்கிய இந்த முயற்சி, சக பதிவர்களின் படைப்புகளின் தாக்கத்தினால் இப்பொழுது விரிந்து தமிழின் சுவையை முழுவதுமாக சுவைக்க வேண்டும் என்பதை நோக்கி செல்ல தொடங்கி விட்டது.

நான் வாழ்க்கைல செய்த உருப்படியான காரியத்தில் இதுவும் ஒன்று என்ற மனநிறைவினை தருகிறது. எனவே, நீங்க போதும் நிறுத்துடானு சொன்னாலும் தொடர்ந்து எழுதுவேன். :). 

Thursday, August 1, 2013

இதயம் வரையும் மடல்

என்னவளுக்கு என் இதயம் வரையும் மடல் --

நிழலென என்னுடன் வரவிருக்கும் என்னவளே,
இன்னுயிருடன் இணையவிருக்கும் இனியவளே,
காலங்கள்  அனைத்தையும் வசந்த காலமாக மாற்றவிருப்பவளே,
சூறாவளியையும் தென்றலாக வீச வைப்பவளே,
இருளை அகற்ற வந்த வெண்ணிலாவே,
வாழ்க்கையை மணக்கச் செய்ய வந்த மல்லிகையே,
தனிமை சிறையிலிருக்கும் எனை விடுவிக்க வந்த தாரகையே,
நெடும் பயணத்திற்கு துணையாய் வரவிருக்கும் என் பாதியே,
என்னை என்னிடமிருந்து திருடியதற்கு தண்டனையாக,
உனை எனில் சிறை வைக்கப் போகிறேன் 
நம் திருமணத்தின் மூலம்...
Related Posts Plugin for WordPress, Blogger...