Saturday, April 13, 2013

தமிழ்ப் புத்தாண்டும், குழப்பமும்...

தமிழ்ப் புத்தாண்டு எந்த நாள் என்று கடந்த சில ஆண்டுகளாக ஒரு குழப்பம் நம்மிடையே நிலவுகிறது. தை முதல் தேதி தான் புத்தாண்டு என்று சிலரும், 'இல்லை!! இல்லை'  சித்திரை முதல் தேதி தான் புத்தாண்டு என்று சிலரும் சொல்லி வருகிறார்கள்.

எது நம்மப் புத்தாண்டு என்று ஒரு அலசு அலசுவோமா?

தை முதல் தேதி தான் புத்தாண்டு என்று சொல்பவர்கள் வைக்கும் முக்கியமானக் காரணங்கள் இதோ....

1. 1921 ஆம் ஆண்டு தமிழ்ப் பண்டிதர்களான மறைமலை அடிகள்,
திரு.வி.க. சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார்,  நாவலர் சோம. சுந்தர பாரதியார்,
கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் கூடி தை மாதம் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்றும், திருவள்ளுவர் ஆண்டினை (திருவள்ளுவர் காலம் கி.மு. 31, வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு) பின்பற்ற வேண்டும் என்ற முடிவை எடுத்தனர் என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.

2. குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தனது பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக் கொண்டு தனது பெயரால் ‘விக்கிரம சகம்’ என்ற ஆண்டு முறையை உருவாக்கி, அதனைத் தமிழர்கள் மீது திணித்தான் என்றும், பிரபவ ஆண்டில் தொடங்கி ‘அட்சய’ ஆண்டில் முடியும் ஆண்டுகளில் ஒரு பெயர்கூட தமிழ் இல்லை. 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான் என்பதே இதற்குச் சாட்சி என்றும் கூறுகின்றனர்.

இவற்றைப் பார்க்கும் பொழுது "அட, சரியாத் தான் சொல்றாங்க" என்று தோன்றியது. உங்களுக்கும் அப்படித் தோன்றுகிறதா?. சரி சரி முடிவு செய்யும் முன் இன்னொருத் தரப்பின் வாதத்தையும் கேட்க வேண்டாமா? தொடர்ந்து படிங்க...

இதோ சித்திரை முதல் நாளே புத்தாண்டு என்றுக் கூறுபவர்களின் வாதம்...

1. தமிழர்களின் ஆண்டு முறை சூரியன் கொண்டு வரையறுக்கப்பட்டது. தமிழ் மாதங்கள் சூரிய மாதங்களாகும். அதாவது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும்போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும் சூரியன் அவ்வாறு ஒருமுறைச் சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை(degrees) அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மேற்சொன்ன 12 இராசிகள் வழியாகவும் பயணம் செய்கிறது. பன்னிரண்டு இராசிகளினதும் பெயர்கள் 1. மேடம்(‍மேஷம்), 2. இடபம்(ரிஷபம்) , 3. மிதுனம், 4. கர்க்கடகம்(கடகம்), 5. சிங்கம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பனவாகும். ஒரு குறிப்பிட்ட இராசிக்குள் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு மாதம் ஆகும்.சூரியன் மேட இராசியில் பயணம் செய்யும்போது நடைபெறும் மாதம் சித்தரையாகும்.
(நன்றி: விக்கிப்பிடியா)

2. ஒரு ஆண்டு இளவேனில்(சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி), கார்(ஆவணி, புரட்டாசி), கூதிர் (ஐப்பசி, கார்த்திகை), முன்பனி(மார்கழி, தை),  பின்பனி(மாசி, பங்குனி) என ஆறுப் பருவங்களைக் கொண்டது. வசந்தம் வரும் இளவேனில் காலம் தொடங்கும் சித்திரை மாதத்தைப் புத்தாண்டாய் கொள்வது தான் சரி என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.

3. சூரியனை ஆதாரமாகக் கொண்ட மணிபூர், அஸ்ஸாம், வங்காளம், திரிபுரா போன்ற வேறு மாநிலத்தவரும், நேபாளம், பர்மா, கம்போடியா போன்ற வேறு நாட்டவரும் சித்தரை ஒட்டியேத் தங்கள் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

4. அகத்தியரும்  பன்னிராயிரத்தில், பங்குனி மாதம் கடை மாதம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

5. ஜாதகமும், ஜோசியமும் சித்தரைப் புத்தாண்டை அடிப்படையாகக் கொண்டதே.

6. 1921 ஆம் ஆண்டு மறைமலை அடிகள் உள்ளிட்ட தமிழ்ப் பண்டிதர்கள் தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தது உண்மையானால், இத்தனை வருடங்களாகியும் அது நடைமுறைப் படுத்தப்படாதது ஏன்?

7. வடமொழிப் பெயர்கள் கொண்ட ஆண்டுகள் நெருடலை தரும் பட்சத்தில், கால அட்டவணை மாற்றுவதற்குப் பதில் வடமொழி ஆண்டுகளுக்கு இணையானத் தமிழ்ப் பெயர்களை தேடலாமே? என்று நினைத்த பொழுது, இந்த படத்தைக் காண நேர்ந்தது.  அழகாக 60 ஆண்டுகளுக்கும் இணையானத் தமிழ்ப் பெயர் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர்கள் வழக்கத்தில் கொண்டு வர முயற்சி செய்தால் போதுமானது.


இவை அனைத்தும் பார்க்கும் பொழுதுச் சித்தரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற வாதமே ஏற்புடையதாக உள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் மட்டுமில்லாது உலகத்தில் வாழும் அனைத்துத் தமிழர்களும் கொண்டாடும் பொதுவான திருநாள். அது குறித்து எந்த முடிவாயினும் தமிழகம் மட்டும் தன்னிச்சையாக முடிவு எடுப்பதுச் சரியல்ல. 

சித்தரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது பல நூறு வருடங்களாகக் கொண்டாடி வரும் ஒரு வழக்கம். அதை திடீரென்று எப்படி மாற்றிக் கொள்ள முடியும். மாற்றுவதால் யாருக்கு என்னப் பயன்? மாற்ற நினைத்தால் குழப்பம் தானே வரும்.

எனவே தேவையற்ற குழப்பத்தைத் தவிர்த்து நம் புத்தாண்டு சித்திரை முதல் நாளே என்பதில் உறுதியாய் இருப்போம்.

அனைவருக்கும் இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

விஜய வருடம் இனிதே விஜயமாகட்டும் :)

Thursday, April 4, 2013

நீயின்றி அணுவும் அசைவதில்லை

என் வாழ்வூதியம்  தரும் முதலாளியானாய்,
என் தனிமைக்குத் துணையானாய்,
என் பயணம் எங்காயினும் வரும் பயணியானாய்,
என் தமிழ் எழுத்துகளை வெளியிடும் பதிப்பகமானாய்,
விடியல் தொடங்கி இரவு வரை என்னுடனே இருக்கும் நிழலானாய்,
கையிலிருந்தபடி அறிவினைத் தரும் ஆசானானாய்.

இவை அனைத்துமாகி எனை உன்னிடத்தில் சிறை வைத்தாய்,
சக மனிதர்களிடம் பழகுவதை குறைக்க வைத்தாய்.
உன்னை விட்டு போய்விடுவேன் என்ற பொறாமையா?
என்னையும் உன்னைப் போல எந்திரமாக்கிவிட்டாய்.

நீ நல்லவனா?  வல்லவனா?  கொடியவனா?
தெரியவில்லை..  ஆயினும்
நீயின்றி அணுவும் அசைவதில்லை எனக்கு,
என் கணினியே!! நீயின்றி உலகில்லை எனக்கு !!

  
Related Posts Plugin for WordPress, Blogger...